Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கல்வி வளர்ப்போம்! ஒற்றுமையாய் கரங்கள் இணைப்போம் 11

அதிரைநிருபர் பதிப்பகம் | February 04, 2012 | , , ,


ஒரு காட்டில் ஒரு சிங்கம் ராஜாவாக இருந்தது. அந்த ராஜா சிங்கத்தை ஒரு முயல் ஏமாற்றி கிணற்றில் தள்ளிவிட்டது என்ற கதையையும், ஒரு நதியில் ஒரு முதலை இருந்தது அந்த முதலையை ஒரு நாவல் மரத்தில் இருந்த குரங்கு ஏமாற்றியது என்ற கதையையும் பள்ளிகளில் இளம் வகுப்புகளில் படித்து இருக்கிறோம்.  எவ்வளவு வலிமை பொருந்தியவர்களாக இருந்தாலும் தனது அந்த வலிமையை உணராவிட்டால் உண்மையிலேயே அவர்களுக்கு வலிமை இல்லை என்பது வெள்ளிடை. அதேபோல உலகில் மாபெரும் சமுதாயமாக இருக்கும் இஸ்லாமிய சமுதாயம் தனது பலத்தை தான் உணரவில்லை. அதனால் யானை படுத்துவிட்டால் ஈக்களும் எறும்புகளும் கூட மேலே ஏறி மொய்க்கத்தான் செய்யும்.

அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விபரப்படி உல்கில் இன்று முதன்மை சமுதாயமாக உருவெடுக்கும் வகையில் - கிறிஸ்தவ மதத்தை பின் தள்ளி வளர்ந்துவிட்ட மார்க்கம் நாம் சார்ந்து இருக்கும் நம்முடைய இஸ்லாம் மார்க்கம் என்று – நெஞ்சு நிமிர்த்தி – மகிழலாம்.

உலக அளவில் அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் நம்மை நோக்கி படையெடுத்து வந்து தங்களை இந்த அமைதி மார்க்கத்தின்பால் இணைத்து வருகிறார்கள். சொந்த அனுபவத்தைக் கூறி சுட்டிக்காட்ட வேண்டுமானால் நான் துபையில் வேலை செய்யும் குழுமத்தில் 2006 முதல் இன்றுவரை 24 பேர் இஸ்லாத்தை தழுவி இருக்கிறார்கள். மாஷா அல்லாஹ்! அனைவரும் ஆப்ரிக, எகிப்திய, ஜோர்டானிய, பிலிப்பினிய நாட்டை சேர்ந்த பெண் கிறிஸ்தவர்கள். ஒரு கர்நாடக மாநில இந்து சகோதரர்.

புள்ளி விபரங்கள் இப்படி பேசுகின்றன.

உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் மட்டுமே உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும், ஒரு லட்சம் பேர் ஆப்ரிக்காவிலும் சிதறிப்போய் உள்ளனர்.

உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிகள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்ரிகாவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்காவிலும் உள்ளனர்.

உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்!.

ஒரு ஹிந்துவுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு புத்தனுக்கு சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்!.

ஒரு யூதருக்கு சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்!.

ஆனாலும் உலக அரசியல் அரங்கில் நடப்பது என்ன? சிங்கத்தை முயல் வெல்வதுபோல், முதலையை குரங்கு ஏமாற்றியது போல் , யானையை எறும்பு மொய்ப்பதுபோல் யூதர்களையும் ஏனையோரையும் எதிலும் வெல்ல முடியாமல் இஸ்லாமிய உலகம் ஏமாந்து நிற்பதுதான் கசப்பான உண்மை; தற்கால சரித்திரம்.   

மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் இஸ்லாமிய உலகம் முன்னேறவில்லை? ஏன் பின் தங்கி இருக்கிறது? ஏன் சக்தியற்று இருக்கிறது?

மக்கள் தொகையில் குறைவாக இருந்தும் ஏன் மற்றவர்கள் முன்னேறி இருக்கிறர்கள்? தொழில் வளர்ச்சியிலும், இராணுவம் உட்பட்ட சக்தி களையும் பெற்று பெருபான்மையை நடுங்க வைக்கவும், விரும்புகிறபடி அரசியல் சதுரங்கம் விளையாடவும் , ஆட்சி அமைப்புகளை மாற்றவும், அநியாயமாக படை எடுக்கவும், அதிகாரங்களை கைப்பற்றவும் ,ஆட்சி செய்தவர்களை தூக்கிலடவும், துரத்தி அடிக்கவும் எப்படி முடிகிறது?

நம்மிடையே கல்வியறிவு இல்லாமை,  நமக்குள் ஒற்றுமை இல்லாமை.

நம்மை விட ஏன் யூதர்களும், கிறிஸ்தவர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர்?. யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால், யூதர்களின் பொருட்களை வாங்காதே என்ற கோசத்தை மட்டும் முன்வைக்கிற நாம், இவர்களின் இந்த அசுர வளர்ச்சிக்கு வித்திட்ட, அடிப்படை விசயங்களையும், அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்து விடுகிறோம் மறுத்து விடுகிறோம். யூதர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்குவதற்கு காரணம் என்ன?. முஸ்லிம்களை விட அறிவுஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ள காரணம் என்ன?.

காரணம் ஒன்றே ஒன்றுதான் அதுதான், அவர்களின் கல்வி வளர்ச்சி.

இதோ இந்த புள்ளி விபரத்தையும் பாருங்கள். 

அமெரிக்காவில் மட்டும் 5,758 பல்கலைகழகங்கள் உள்ளன.

இந்தியாவில் மட்டும் 8,407 பல்கலைகழகங்கள் உள்ளன.

ஆனால் பரிதாபமாக உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 500  பல்கலைகழகங்கள் மட்டுமே உள்ளன.  உலகின் தலை சிறந்த பல்கலைகழகங்கள், ஓன்று கூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை. 

உலக கிறிஸ்தவர்களில் கல்வியறிவு பெற்றோர் 90%;   ஆனால் இஸ்லாமியர்கள் 40% மட்டுமே.

முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடுகளில் அவர்கள் 100% கல்வியறிவு பெற்ற நாடுகள் 15.  ஆனால் முஸ்லிம்களை அதிகமாக கொண்டுள்ள நாடுகளில் ஓன்று கூட இல்லை.

அடிப்படைக்கல்வியை பூர்த்தி செய்துள்ள கிறிஸ்தவ நாடுகள் 98%.    ஆனால் இஸ்லாமிய நாடுகள் 50% கூட தேறவில்லை. 

உயர் படிப்புக்கு செல்கின்ற கிறிஸ்தவர்கள் 40% ஆனால் நாமோ 2% கூட உயர் படிப்புக்கு செல்வதில்லை.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.

ஆனால ஒரு மில்லியன் முஸ்லிம்களுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.

ஒரு மில்லியன் கிறிஸ்தவர்களில், 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர். ஆனால் , ஒரு மில்லியன் முஸ்லிம்களில், வெறும் 50  பேர்கள் மட்டுமே தொழிற்நுட்ப வல்லுனராக உள்ளனர்.

கிறிஸ்தவ நாடுகள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.ஆனால் இஸ்லாமிய நாடுகள் இதற்க்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.

கடந்த 105 வருடங்களில், 14 மில்லியன் யூதர்களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர்.

ஆனால் 1.5 பில்லியன் மக்கள் தொகையினை கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 (மூன்று) முஸ்லிம்கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர்.

இப்படியே சொல்லிக்கொண்டே போகலாம். கல்வியை பொருத்தவரை மிகவும் பின்தங்கி அதில் முனைப்புக்காட்டாமல் வெற்றுகூப்பாடு போட்டுக்கொண்டு இருக்கிறோம். ஆனால் இறைவனின் நிந்தனைக்கு ஆளானோர், அவன் தந்த நன்நெறிவிட்டு அகன்றோர் கல்வியில் மேம்பட்டு நம்மை உலகெங்கும் ஆட்டிப்படைக்கின்றனர். கல்வி நிலையங்களைத் தங்களின் கைகளுக்குள் வைத்திருக்கிறார்கள். ஏன் நாம் கூட நமது பிள்ளைகளை பாஸ்டன் பள்ளியிலும் , புனித சேவியர், பீட்டர், அந்தோனியார் பள்ளிகளில் தானே சேர்க்கிறோம். அல்லது சேர்க்கத்தானே  பிரியப்படுகிறோம். 

தமிழகத்தை பொருத்தவரை கடவுள் மறுப்பு கொள்கை வைத்திருக்கும் தி.க கட்சி கூட தனக்காக ஒரு பல்கலைக்கழகம் வைத்து இருக்கிறது. அதேபோல் இந்து மத கோட்பாடுகளை பின்பற்றும் மடாலயங்கள் சாஸ்தா போன்ற பல்கலைக்கழகங்களை வைத்திருக்கின்றன. அலிகர் முஸ்லிம் பல்கலை கழகத்தையும் , ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழகத்தையும் தவிர இந்தியாவில் நமக்கு பெயர் சொல்ல ஏது வேறு பல்கலைக்கழகம்? இந்தியாவை பல ஆண்டுகள் கட்டித்தான் ஆண்டோம்- கல்வியை ஆளவில்லையே.!  ஆனால் ஆண்ட ஆண்டுகளில் எத்தனை கல்வி நிலையங்களை ஆங்கில கிறிஸ்தவ ஆட்சி இந்தியாவில் உருவாக்கி இருக்கிறது? தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், எதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல் மற்றும் உயரிய படிப்பைக் கொண்ட பல்கலைகழகத்தை தொடங்கி சேவை மனப்பான்மையில் நடத்த துணிந்ததுண்டா? .

அடுத்து ஒற்றுமை இன்மை

உலக அரங்கில் காலம் காலமாக பாலஸ்தீனியர்களின் துயரம் தொடர்ந்துகொண்டே போகிறது. இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு சரி. காகித கண்டனத் தீர்மானங்கள் கண்ணீரைத் துடைக்குமா? காகிதப்பூ மணக்குமா?  அநியாயமாக ஈராக் ஆக்ரமிக்கப்பட்டபோதும், ஆப்கானிஸ்தானில் அரசியல் அத்துமீறல்கள் நடந்தபோதும், லிபியாவில் உள்நாட்டு பிரச்னையை ஐரோப்பிய வல்லரசுகள் தூண்டிவிட்டபோதும் சரி எங்கே எது நடந்தாலும் தனக்கு ஆபத்து இல்லாமல் இருந்தால் சரி என்று ஒதுங்கி இருக்கும் தத்துவம்தான் இஸ்லாமிய நாடுகளுக்கிடையே நிலவி வருகிறதே தவிர ஒன்றுபட்டு தீமையை எதிர்ப்பதில்லை.  அரசுகள் அதற்கு தயாராக இல்லை. முக்கிய காரணம் ஒற்றுமை இன்மை. ஊர் இரண்டுபடுவது கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது. தட்டி கேட்க ஆள் இல்லாமல் சின்னஞ்சிறு இஸ்ரேல் சிலம்பாட்டம் ஆடி வருகிறது.  

யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் இயல்பாகிப்போன சூழ்ச்சியும் நரித்தனமும் தாரகமந்திரங்களாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது..  கிறிஸ்தவர்கள் ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள் ஆயிரம் பிளவுகளும் பிரிவுகளும் இருந்தாலும் காழ்ப்புணர்ச்சியுடன் கடும் சொல் பேசி . வசைமாரி பொழிந்து கொள்வது கிடையாது. எதிர்த்து போஸ்டர்கள் ஓட்டுவது கிடையாது. 

ஒரே இறை வேதத்தைக் கொண்ட இஸ்லாத்தில் நூற்றுக் கணக்கான ஜமாத்கள்-. இயக்கங்கள்-. பிரிவுகள்-. மற்றும் பிரிவினைகள். ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம். கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருகின்றது. 

உலகமெங்கும் இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி மனிதக்கூட்டம் இணைந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் - இந்த வளர்ச்சியைப் பார்த்து மகிழும் நிலையில் நாம் வாழும் தமிழகத்தில் நமது நிலை என்ன என்று பார்த்தோமானால் கண்ணீர் விட்டு கதற வேண்டிய நிலயில் இருக்கிறோம் என்பதை எந்த நடுநிலையாளரும் மறுக்க இயலாது. 

புதிய இயக்கங்கள் தோன்றியதன் மூலம் ஒரு புத்துணர்வு தோன்றியதையும் ஒரு மறுமலர்ச்சியும் உத்வேகமும் ஏற்பட்டதையும் நாம் ஏற்றுக்கொள்வோம்.  அதேநேரம் இந்தக் கருத்துக்களை முன்னெடுத்து சென்றவர்களின் சுயநலப்போக்கும், சொத்துகுவிக்கும் பேராசையும், தான் என்ற ஆணவமும், சுயவிளம்பர  தம்பட்டங்களும், முன்வரிசை தலைவர்களின் பதவி ஆசையும், மிக குறுகிய காலத்தில் வெட்டவெளிச்சமாகி நீ பெரியவனா நான் பெரியவனா என்று இயக்கங்கள் ஒன்று இரண்டாகி, இரண்டு நான்காகி போட்டி இயக்கங்களாகி நமது முக்கிய நோக்கங்களைச் சிதைத்து, இன்று நமது போட்டியாளர்கள் நாம் போடும் சண்டையைப் பார்த்து எள்ளி நகையாடும் நிலைமைக்கு தள்ளிவிட்ட்து. தலைவர்கள் என்று கொண்டாடப்பட்டவர்களின் தன்னலம் வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டதால் பிரிந்து செல்லும் இயக்க சொந்தங்களை பினைத்துவைக்கும் தகுதியை இழந்து நின்றனர். கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தலையை தொங்கப்போட்டார்கள்.., கோபப்பட்டார்கள். இதனால் சிந்திக்கும் திறனற்ற சில தேர்ந்தெடுத்த இளைஞர்களை மூளை சலவை செய்து ஆட்டுவித்தார்கள்..

சுயநல தலைவர்களின் பின் சென்ற இந்த சிறிய சமுதாயத்தின் முத்கெலும்பாக திகழ வேண்டிய இளைஞர்கள் திக்காலுக்கு திக்கால் பிரிந்து நின்று மார்க்கம் போதித்த முறைகளுக்கு மாறாக ஒருவரை ஒருவர் மனம் புண்பட பேசுவதும் , ஏசுவதும் ஊடகஙகளில் வசை பாடிக்கொள்வதும் வாடிக்கையாகிவிட்ட்து. 

மாற்று மதத்தினவர் நம்முடைய சகோதரத்துவம் சார்ந்த சமூக வாழ்வையும் நமது அன்பு, அறம், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் பண்பையும் கண்டு வியந்து நம்மை நோக்கி வந்து நம்மை தழுவினார்கள். இன்றோ சந்தி சிரிக்கிறது நமது சகோதரத்துவம்.! எதிரிகள் எள்ளி நகையாடுகின்றனர்!. இதற்கு நாமே இடம் கொடுத்து விட்டோம்!

ஐம்பது குடும்பங்கள் இருக்கும் ஒரு சிறிய ஊரில் கூட ஒரே பள்ளியில் நாம் ஒன்று சேர்ந்து தொழமுடியாமல் போனோம். நூற்றண்டுகளாக ஊர் நடுவே இருந்துவரும் பள்ளிவாசல்களில் ஒன்று சேர்ந்து தொழ முடியாமல் ஊருக்கு வெளியே ஓலைக்குடிசைபோட்டு தொழுது வருகிறோம் .குடும்பங்களில்  வாப்பா ஒரு இயக்கம், தம்பி மறு இயக்கம், மகன் வேறொரு இயக்கம் என்று பிரிந்து பெருநாள்களைக்கூட ஒரு குடும்பம், ஒரு ஊர், ஒரு ஜமாத் ஒரே நாளில் கொண்டாடி கட்டி தழுவி சலாம் கூறும் பண்பு கூட பாழ்பட்டுப்போனது. (சில வீடுகளில் மூன்று நாள் வட்டிலப்பம், கடப்பாசி  வைக்க வேண்டி இருக்கிறது.) பிறை கண்டால் பெருநாள் என்பது எல்லாம் பழங்கதை. இயக்கங்கள் ஒலிபெருக்கியில் அறிவித்தால்தான் அன்று பெருநாள் என்பது புதுக்கதை. திருமணங்களில் ஊர் ஒன்று கூடி வாழ்த்த முடியவில்லை.. ஒன்றாக பழகிய நண்பர்கள் இந்த பாகுபாட்டால் ஒரே ஊரில் முகம் திருப்பிப்போகும் மூமின்களாக (?) காட்சி தருகின்றனர். சிற்றூர் , பேரூர் எங்குமே இன்னிலை. யாரும் மறுக்கமுடியாத நிலை - இன்றைய அவல நிலை. ஒரே மரத்தில் ஒன்பது கொடிகள் பறக்கின்றன. அதனால் அந்த மரமும் பட்டுப்போகிறது. நமது மார்க்கமும் எள்ளி நகையாடப்படுகிறது. 

அரசியல் களத்தில் பொது எதிரிகளை வீழ்த்த வேண்டிய நாம் அந்த எதிரிகளின் கூடாரத்தை முட்டு கொடுத்து தாங்கும் அவலநிலைக்கும் ஆளானோம். பொதுதேர்தல்களில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்காக பேரம் பேசும் தகுதியை ஒற்றுமையின்மையினால் இழந்து அவர்கள் போட்டதைப் பெற்று பெருமை பேசினோம். நம சொந்தங்களை நாமே தோற்கடித்து வாழ்த்து சுவரொட்டி ஒட்டும் அளவு நமது வன்மம் காட்டிக்கொண்டோம். நமது ஆதிக்கத்தில் இருந்த சென்னை துறைமுகத்தில் முஸ்லிம் தோழன் தோற்க நாமே  காரணம் ஆனோம். சேப்பாக்கத்தில் நமது இளம் மைந்தன் தோற்கவும்  நாமே காரணம் ஆனோம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்  வாணியம்பாடியில் நாம் தோற்கவும் நாமே  காரணம் ஆனோம். நமக்குள் வாக்குகளை பிரித்துக்கொண்டு முத்துப்பேட்டையிலும், மேட்டுப்பாளையத்திலும் பேரூராட்சி மற்றும் நகர மன்றங்களை இழந்தோம்.  

தற்போது சொத்துக்களுக்காக பங்காளிகள் சண்டையை அரங்கேற்றவும் முஷ்டி மடக்கி தயாராகிவிட்டோம். நமது சொந்தங்களை நாம் அழைக்கும் பெயர்களைக் கேட்டால் வெட்கி தலை குனியவேண்டி வரும் . “மாமா கட்சி” , “ பொய்யன் ஜமாத்” “ டவுச்ர் ஜமாத்” “ அண்ணண் ஜமாத்” “ வாத்யார் கட்சி” “ ஹஜரத் கட்சி” என்றும் “ போடா, வாடா என்றும், சொல்லக்கூசும் வார்தைகளால் பொதுத்தளங்களில் அர்ச்சனை செய்துகொள்கிறோம். திருவிடச்சேரியில் நம்மை நோக்கி நாம் துப்பாக்கியால் சுட்டு உயிர்பலி கொண்ட வழக்கு நீதிமன்றத்தில் என்பது தலைகுனிய வேண்டிய வெட்ககேடு. இதையா இஸ்லாம் சொல்லித்தந்தது? இதற்கா இரசூலுல்லா கண்ணீர் சிந்தி, ரத்தம் சிந்தினார்கள்? இந்த செயல்களில் பெயருக்குகூட மனித நேயமும் தென்படவில்லை- முஸ்லிம்களை முஸ்லிம்கள் காயப்படுத்தாமல் கண்ணியப்படுத்தும் தவ்ஹீதும் இல்லை. 

இதோ என நண்பர் நாஞ்சில் நாட்டு கவிஞர் அபூ ஹஷீமா இப்படி கண்ணீர் வடிக்கிறார். 

“காபூலின் திராட்சைகளில் வடிகிறது 
தலிபான்களின் ரத்தம்!
கால்நடைகளுக்கும் உபயோகப்படாத 
கழிவுநீர்க் குளங்களாய் 
தேங்கிக் கிடக்கிறது 
குஜராத் முஸ்லிம்களின் 
களவாடப்பட்டக் கண்ணீர்!
டைக்ரீஸ் நதியின் தண்ணீரில் 
கொழுந்துவிட்டு எரிகிறது 
ஏகாதிபத்தியத்தின் நெருப்பு!
காஷ்மீரின் பனிக்குடங்களில்
கருக்கலைப்பு நடத்துகின்றன 
பாசிச ஆயுதங்கள்!
இஸ்ரேலின் சவச்சாலைகளுக்கு 
சரளைக் கற்களாய் பதிக்கப் படுகின்றன 
பாலஸ்தீனியர்களின் பிணங்கள்!

மேலைநாட்டின் 
மாய சொர்கங்களுக்காக 
ஈமானை அடமானம் வைத்து 
நரகங்களில் 
மயங்கிக் கிடக்கும் 
அரபு நாட்டுச் சீமான்கள்!
வல்லூறுகளின் வாய்ப்பட்ட 
விருந்தின் எச்சங்களாய் 
இன்னும் மிச்சமிருக்கும் 
எங்கள் கூட்டம்
எட்டாவது அதிசயம்!

மொத்தமும் அழிந்திருந்தால் 
சுன்னத் 
தௌவ்ஹீத் 
சொர்கவாதி 
நரகவாதி என்று 
எங்களை நாங்களே 
அழித்துக் கொள்ளும் 
ஒன்பதாவது அதிசயத்தை 
நிகழ்த்திக் காட்டுவது 
யார்?”
-அபூ ஹஷீமா. 

யாரையும் காயப்படுத்துவதோ, மனம் நோகச்செய்வதோ, அறிவுரை பகர்வதோ இந்தப்பதிவின் நோக்கமல்ல. நாம் ஒன்றுபட வேண்டும். நமது சமுதாயம் ஒருங்கிணைந்து செயல்பட்டால் நமது மக்களுக்கு வேண்டியவற்றை உத்தரவிட்டு நாம் வாங்க முடியும்.

நம்முடைய சக்தி ஆற்றல் மிக்கது . அந்த சக்தி சிறுசிறு கிளை வாய்க்கால்களாக பிரிந்து ஓடினால் ஒரு பயனும் இல்லை. ஒரு பெரிய பிரவாகமாக. ஒரு ஜீவநதியாக நாம் உருவெடுத்தால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட் ஏனைய சமுதாயத்தினரும் நம்மை நோக்கி வருவார்கள். அவர்களையும் நம்மோடு இணைத்துக்கொண்டு ஒரு நல்ல தலைமையை நாம் வகிக்க முடியும். நாம் போய் மாற்றாருக்கு பூச்செண்டு கொடுக்கவும், போர்வை போர்த்தவும் வேண்டியதில்லை. நம் சமுதாயத்தை தேடி அவர்கள் வரும் நாள் வரும்.  

கல்வி வளர்ப்போம்.! ஒற்றுமையாய் கரங்களை பற்றிப்பிடிப்போம்! இன்ஷா அல்லாஹ். 

உள் நோக்கம் எதுவும் இல்லை! மனதில் பட்டதை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இந்த பதிவின் நோக்கத்தை அறிந்த ரப்பில் ஆலமீன் ஆகிய எல்லாம் வல்ல அல்லாஹ் நன்மையாக்கி வைப்பானாக! ஆமீன்.

-இபுராகீம் அன்சாரி

11 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அசர வைக்கும் புள்ளி விபரங்கள் !

சிந்தனையை கிளறிவிட்டிருக்கும், ஆக்கம்...

கல்வியில் நம் நிலை, ஒற்றுமையின்மையால் இந்நிலை !

என்ற ஆராய்ச்சிப் பதிவு !

sabeer.abushahruk said...

புள்ளி விவரங்களால் சொல்லி அடிக்கும் பதிவு. நெத்தியடியென பொட்டிலடிக்கிற கவிதை. குச்சியால் உல்லங்கையில் படீரென அடிக்கும் வாத்தியாரின் கோபம் கொப்பளிக்கும் வார்த்தைகள் என உணர்ச்சி பிரவாகமான இந்த ஆக்கம் சம்மந்தப்பட்டவர்களுக்கு சாட்டையடி; எல்லாம் சகித்து அசமந்தமாக இருப்பவர்களுக்கோ கன்னத்தில் அடி!

இபுறாகிம் அன்சாரி காக்கா வந்ததிலிருந்து அதிரை நிருபருக்கு தலைமை ஆசிரியர் வாய்த்ததுபோலொரு பொளிவு.

தொடருட்டும் காக்காவின் தொண்டு.

நன்றியும் வாழ்த்துகளும்

Noor Mohamed said...

இபுராஹீம் அன்சாரி காக்கா அவர்களின் அனல்பறக்கும் ஆவேசம் நிறைந்த கனல் தெறிக்கும் கட்டுரை.

ஓர் இறை - ஏகத்துவம் என்ற முத்திரையை கையில் எடுத்துக் கொண்டு, ஏகத்துவம் என்ற பெயரில் எண்ணற்ற பிரிவுகளாய் பிரிந்து, ஒருவருக்கொருவர் அவரவர்களின் குற்றம் குறைகளை உணராது, அடுத்த சகோதரர்களை அரை குறை என அறைகூவும் அதிமேதாவிகள் நம்மில் ஏராளம். அந்த அதிமேதாவிகளுக்கு இது ஒரு சவுக்கடி.

எவ்வளவுதான் புள்ளி விவரங்களைத் திரட்டி, எப்படி சொன்னாலும், அது செவிடன் காதில் ஊதிய சங்குதான்.

இபுராஹீம் காக்கா, இது போன்ற நோய் தீர்க்கும் மருந்தான ஆக்கங்களை தொடர்ந்து தருவீரளாக.

Yasir said...

தெள்ளத்தெளிவாக,சமுதாய அக்கறை தீ எரிய நாம் அனைவரின் ஆதங்ககளையும் கொப்பளித்து இருக்கின்றீர்கள் மாமா....கல்வி வேண்டும்...சல்லிக்காசுக்கும் உதவாத இயக்கமயக்கங்கள் தெளிந்து நாம் அனைவரும் ஒர் இயக்கத்தில் இருந்து சாதிக்க வேண்டிய தருணம் இது....ஒற்றுமை இல்லையேல் தாழ்வே

Muhammad abubacker ( LMS ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

புள்ளி விவரங்களில் பிரிளியன்ட்டான இபுராஹிம் அன்சாரி காக்காவின் புள்ளிகள் தலையை சுற்றி கோலங்கள் போடுகின்றன.

// மேலைநாட்டின்
மாய சொர்கங்களுக்காக
ஈமானை அடமானம் வைத்து
நரகங்களில் மயங்கிக் கிடக்கும்
அரபு நாட்டுச் சீமான்கள்! //

சவுதி அரேபியாவில் மேலை நாட்டினருக்கு ஒரு சட்டமும்,மற்ற நாட்டினருக்கு ஒரு சட்டமும் அங்கேயும் நீதி இல்லை என்று தான் சொல்லமுடியும்.காரணம் அராம்கோ கேம்பில் உள்ளே போனால் பாலைவனம் சவூதி போல் இல்லாமல்.சோலைவனம் போல் காட்சி தரும்.அங்கு உள்ள கடைகளில் மது பானங்களும்.மேலை நாட்டு பெண்ங்கள்
அரைகுறை ஆடைகள்,அங்கு எல்லா சேனல்களும் அனுமதி.எல்லா வகையிலும் அவர்களுக்கு சுதந்திரம்.

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கல்வியின் கட்டாயம், ஒற்றுமையின் அவசியம் பற்றி மிகச்தெளிவான புள்ளிவிவர ஆதாரங்களுடன் கூடிய நல்ல பதிவு.

"ரப்Bபி ஜித்னி இல்மா"

கல்வி வளர்ப்போம்.! ஒற்றுமையாய் கரங்களை பற்றிப்பிடிப்போம்! இன்ஷா அல்லாஹ்.

Shameed said...

அறியாத பல புள்ளி விவரங்களை அள்ளித்தந்தமைக்கு நன்றி (கொழும்பில் இருந்து ஹமீது )

ZAEISA said...

தரமான,தார்மீகமான ஆக்கம் .இதைப் பார்த்தாவது நம் மக்களுக்கு அல்லாஹ்
நல் வழி காட்டப்போதுமானவன்.ஆமீன். அதிரை நிருபர் கிரீடத்தில் இன்னுமொரு
வைரம்.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பினிய இப்றாஹிம் அன்சாரி காக்கா,

உண்மையில் இந்த பதிவை திரும்ப திரும்ப படித்து வேதனையில் கண்ணீர்விடாமல் இருக்க முடியவில்லை...

நடுநிலையான ஒவ்வொருவரின் ஆதங்கத்தை அப்படியே பிரதிபளித்துள்ளது இந்த பதிவு..

ஜஸக்கல்லாஹ் ஹைர்.

அல்லாஹ் உங்களுக்கு நல்லருள் புரிவானாக

தாஜுதீன் (THAJUDEEN ) said...

//யூதர்களுக்கும், கிருத்துவர்களுக்கும் இயல்பாகிப்போன சூழ்ச்சியும் நரித்தனமும் தாரகமந்திரங்களாக இருந்தாலும், முஸ்லிம்களை போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதி சண்டையிட்டுக் கொள்வது கிடையாது.. கிறிஸ்தவர்கள் ஒரு வேதத்தையே, பல பிரிவுகளாக்கி கொண்டவர்கள் ஆயிரம் பிளவுகளும் பிரிவுகளும் இருந்தாலும் காழ்ப்புணர்ச்சியுடன் கடும் சொல் பேசி . வசைமாரி பொழிந்து கொள்வது கிடையாது. எதிர்த்து போஸ்டர்கள் ஓட்டுவது கிடையாது.

ஒரே இறை வேதத்தைக் கொண்ட இஸ்லாத்தில் நூற்றுக் கணக்கான ஜமாத்கள்-. இயக்கங்கள்-. பிரிவுகள்-. மற்றும் பிரிவினைகள். ஒரு இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம். கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு, நீதிமன்றம் என்றும், அடித்துக் கொண்டும், போராட்டம் நடத்திக்கொண்டும் தங்களின் வாழ்வாதாரங்களை வீனடித்துக் கொண்டு இருகின்றது.

உலகமெங்கும் இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை நோக்கி மனிதக்கூட்டம் இணைந்து கொண்டிருக்கும் இந்தவேளையில் - இந்த வளர்ச்சியைப் பார்த்து மகிழும் நிலையில் நாம் வாழும் தமிழகத்தில் நமது நிலை என்ன என்று பார்த்தோமானால் கண்ணீர் விட்டு கதற வேண்டிய நிலயில் இருக்கிறோம் என்பதை எந்த நடுநிலையாளரும் மறுக்க இயலாது.//

முழுக்க முழுக்க உண்மை காக்கா...

அப்துல்மாலிக் said...

காக்கா, ஒலகத்துலே ஆரம்பிச்சு, கண்டத்தை கண்டித்து, நாட்டுக்கு ஒரு குட்டு வெச்சி, மாநிலத்தை ஆட்டிவித்து சொந்த ஊருக்கு உலைவைத்து குடும்பத்தின் ஒற்றுமையின்மையை வரிசையாக புள்ளி விபரத்துடன் சுட்டிக்காட்டிய விதம் அருமை அருமை பெருமையும் கூட.....

கல்வி, விழிப்புணர்வு, சகோதரத்துவம் இதுலே முன்னிருந்தாலே போதும் யாவரையும் வெல்லும் திறமை வந்துடும்... இன்ஷா அல்லாஹ்

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு