Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

கண்கள் இரண்டும் - தொடர் - 6 10

அதிரைநிருபர் பதிப்பகம் | October 07, 2013 | , , , ,


கண்களின் முக்கிய பாகங்கள் / அமைப்பு

கண்கள் இரண்டும் முதல் பதிவில் குறிப்பிட்டது போன்று கண்ணுக்கும் கேமராவிற்கும் உள்ள ஒப்பீட்டை ஞாபகமூட்டும் விதமாக சில வார்த்தைகளை மீண்டும் கொஞ்சம் தருகிறேன். காமிரா எப்படி ஒரு பொருளின் நிழலைத் தன்னிடம் பதியச் செய்து நிழற்படமாகக் கொடுக்கிறதோ அவ்வாறே கண்களும் வேலை செய்கின்றன. ஒளிக்கதிர்கள் கருவிழி மூலம் கண்ணுக்குள் சென்று கண்மணியில் பட்டு வளைந்து ஒளித் திரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தலைகீழாகப் பதிவாகிறது.

அங்கு ஏற்படும் பார்வை நரம்புகளின் உதவியால் மூளையின் பின்பகுதியை அடைகிறது. அங்கு உருவம் நேராக்கப் படுகிறது. இதைத்தான் நாம் பார்வை என்கிறோம். கண்ணில் கீழ்கண்ட உறுப்புகள் முக்கிய பணியாற்றுகின்றன பார்வை நரம்பு, சிலியா தசை நார், ஒளிக்கதிர்கள் மேகுலா இடத்தில் குவிதல், கண் ஆடி, கருவிழி, விழித்திரை.

பொதுவாக கண்கள் பார்க்கும் பிம்பங்களின் தகவல்கள், விழித் திரையிலுள்ள, 'போட்டோ ரிசெப்டார்' எனும், உயிரணுக்கள் மூலம் சேகரிக்கப்படும். அவை சமிக்ஞைகளாக மூளைக்குச் சென்று, மூளையில் உள்ள 'காங்க்ளியான்' உயிரணுக்கள் மூலம் தகவல்கள் புரிந்து கொள்ளப்படும். இயல்பான கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வு இதுவே.

கண்ணின் பாகங்கள்

கருவிழி, பாப்பா, வெண்படலம், கோராய்ட், ஒளித்திரை, பார்வை நரம்பு, கண்முன் ரசம், இரத்தக் குழாய்கள் விழித்திரை, லென்ஸ், விட்ரியஸ், ஆப்பிக் கயாஸ்மா (இரு பார்வை நரம்புகளும் சந்திக்கும் இடம்)  பார்வைத் தடம் (Optic Tract), பார்வை பாதையின் விரிசல்கள்(Optic Radiations) மூளையின் பின்பகுதியில் உள்ள பார்வை பதியும் இடம் (Visual cortex in the occipital lobe) இரு கண்களும் அசைவதற்கு ஒவ்வொரு கண்ணிலும் ஆறு தசைநார்கள் உள்ளன. ஒளிக்கதிர்களானது கருவிழி, கண்ணின் முன்ரசம், பாப்பா, லென்ஸ், விட்ரியஸ் வழியாகச் சென்று ஒளித்திரையில் உள்ள மேகுலா (Macula) என்ற இடத்தில் உள்ள நுட்பமான போவியா Fovea என்ற புள்ளியில் குவிகிறது. இந்தப் பகுதிதான் பார்வையை மூளைக்கு எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

கண் என்பது நம் பார்வைக்கான உறுப்பு. இது மண்டையோட்டில் கருக்கோளக் குழிக்குள் அமைந்துள்ளது. கண் புருவங்கள் கண்ணிற்கு நிழலை அளிக்கின்றன. மேலும் இவை வியர்வை கண்ணுக்குள் சென்று எரிச்சலை ஏற்படுத்தாதவாறு தடுக்கின்றன. கண் இமைகளும், இமை முடிகளும் கண்ணுக்குள் தூசி எதுவும் விழாமல் தடுக்கின்றன. கண் இமைக்கும் செயலால் கண்ணீர் கண்ணின் மேல் பகுதியில் பரவி உராய்வு தடுக்கப்படுகிறது. இந்த கண்ணீர் உராய்வினை மட்டும் தடுக்கவில்லை, இதில் பாக்டீரியா போன்ற கிருமிகளை கொள்ளும் நொதிகளும் உப்புகளும்உள்ளன.

கண் என்பது இரண்டு திரவங்களால் நிரப்பப்பட்ட ஒரு கோளம் ஆகும். ஆறுதசைகள் அதை இயக்குகின்றன. அவை குறுக்கும் சாய்வுமான தசைகள். கண்ணின் சுவர் மூன்று அடுக்குகளால் ஆனது. வெளிப்பகுதி விழிவெண்படலம்(ஸ்கிளீரா) என அழைக்கப்படுகிறது. இது வெள்ளை நிறத்தினால் ஆனது. இதனாலேயே நம் கண் வெண்மையாக காணப்படுகிறது. கார்னியா அல்லது கருவிழி எனப்படுவது இதன் ஒளி ஊடுருவும் தன்மையுள்ள முன்பகுதியாகும். இரண்டாவது அடுக்கு காராய்டு ஆகும். இதில் பல இரத்தக் குழாய்களும் நிறமிகளும் அடங்கியுள்ளன. இது கருப்பு நிறத்தில் ஒளி ஊடுருவாத தன்மையுடன் இருக்கும். 

மூன்றாவது மற்றும் உள்பக்க அடுக்கான சிலியரி தசை பகுதியில் பல மென் தசைகள் லென்சை ஒரு நிலையில் தாங்கி பிடித்துள்ளன. விழித்திரைப் படலம் என்பது பாவையை சுற்றி அமைந்துள்ள நிறமுள்ள தசையாகும். இது பாவைக்குள் நுழையும் ஒளியின் விட்ட அளவை கட்டுப்படுத்தும். நாம் இருட்டறைக்குள் செல்லும்போது இது திறந்து அதிக வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கிறது. பலமான சூரிய ஒளியில் நாம் இருக்கும்போது சுருங்கி வெளிச்சத்தைக் குறைக்கிறது.

கண்ணின் உள்பக்கம் இரண்டு அறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முன்பக்க அறையில் அக்யூவஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இது ஒளியை விலகச் செய்கிறது, கண்ணுக்குத் தேவையான சத்துக்களை அளிக்கிறது, மேலும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. இது சிலியரி தசையால் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்பக்க அறையில் விட்ரியஸ் ஹியூமர் என்னும் திரவம் உள்ளது. இதுவும் கண்ணுக்குள் உள்ள அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது, ஒளியை விலகச் செய்கிறது, மேலும் ரெடினாவையும் லென்சையும் தாங்குகிறது. ரெடினா என்பது கண்ணின் உட்பக்க அடுக்காகும் இதில் ஒளி உணர் செல்கள் உள்ளன. இதில் உள்ள நிறமிகள் அடுக்கு ஒளி திரும்ப பிரதிபலிக்காதவாறு பார்த்துக்கொள்கின்றன.

இந்த ரெடினாவில் கூம்புகள் மற்றும் குச்சிகள் எனப்படும் நரம்பு செல்களின் அடுக்கு உள்ளது. குச்சிகள் மங்காத வெளிச்சத்திற்கும், கூம்புகள் நிறங்களைக் கண்டறியவும் பயன்படுகின்றன. இந்த கூம்புகளின் கலவையாலேயே நம்மால் அனைத்து நிறங்களையும் கண்டறிய முடிகிறது. இந்த செல்கள் இணைந்து ஆப்டிக் எனப்படும் பார்வை நரம்பை உண்டாக்குகின்றன. இந்நரம்பு மண்டையோட்டின் கருக்கோள குழியில் பின்புறத்தில் உள்ள ஒரு துளைவழியாக மூளையின் பின் பக்கமாக சென்று மூளையுடன் இணைகின்றன.ரெடினாவின் மையத்தில் ஒரு மஞ்சள் நிறப் புள்ளி உள்ளது. அதன் மையத்தில் உள்ள பள்ளம் ஃபோவியா செண்ட்ராலிஸ் என அழைக்கப்படுகிறது இந்த இடமே கூர்மையான பார்வையை உண்டாக்கும் இடமாகும். அதற்கு பக்கத்தில் ஆப்டிக் நரம்பு செல்கிறது. ரெடினாவை உற்பத்தி செய்ய விட்டமின் ஏ தேவை. இதனாலேயே விட்டமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு மாலைக்கண் நோய் ஏற்படுகிறது. அவர்களால் வெளிச்சம் குறைவான நேரத்தில் பார்க்க முடியாது.


இளைஞர்களுக்கு லென்ஸ் உறுதியான ஒளி ஊடுருவும் திரவத்தால் நிரப்பப்பட்டிருக்கும். லென்ஸ் தளர்ந்த நிலையில் இருக்கும்போது அது ஏறக்குறைய கோளவடிவில் இருக்கும். படத்தில் காண்பித்துள்ளவாறு சுமார் 70 நிலைநிறுத்தும் தசைநார்கள் லென்சை கருக்கோளத்திற்குச் சற்று வெளியே நிற்கும்படி பிடித்துக் கொள்கின்றன. மேலும் பல தசைநார்களும் சிலியரி தசைகளும் லென்சை சரியான நிலையில் நிலைநிறுத்துகின்றன. 

பார்வைத்திறன்

முதல் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வை ஆற்றலும் 6/6 என்ற அளவில் இருத்தல் வேண்டும் (இத்தகுதி இராணுவம், கப்பற்படை, காவல்துறை) ஆகியோருக்குப் பொருந்தும். இரண்டாம் நிலை: ஒவ்வொரு கண்ணின் பார்வைத்திறன் (+4.00 அல்லது -4.00) கண்ணாடி அணிந்தபின் 6/9,6/6 இருத்தல் வேண்டும். மூன்றாம் நிலை: கண்ணின் பார்வைத்திறன் +6.00 அல்லது -6.00 கண்ணாடி அணிந்தபின் 6/6 அல்லது 6/9 இருத்தல் வேண்டும் .

உங்கள் பார்வைத்திறன் குறைவடைந்து செல்கிறதா..? அதிகரிக்க இதோ..!

இன்றைய காலத்தில் கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை. ஏனெனில் தற்போது உண்ணும் உணவுப் பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை, வேலைப்பளு போன்றவற்றால் கண்களுக்கு தேவையான சத்துக்கள் இல்லாமல், கண்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் இப்போதுள்ள குழந்தைகள் அனைவரும், சிறு வயதிலேயே பார்வைக் கோளாறால் விரைவிலேயே கண்ணாடியை போட்டுவிடுகின்றனர்.

மேலும் கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் வேலை செய்பவர்களும் சீக்கிரம் கண்ணாடியை அணிந்து விடுகின்றனர். இவை அனைத்திற்கும் காரணம் போதிய சத்துக்கள் உடலில் இல்லாததே ஆகும். சிலர் தண்ணீர் போதிய அளவில் குடிக்காமல், மிகவும் குறைந்த அளவில் குடிக்கின்றனர். இதனால் உடலில் வறட்சி ஏற்படுவதோடு, கண்களிலும் வறட்சி ஏற்பட்டு, கண்கள் வலுவிழந்துவிடுகிறது.

ஆகவே இத்தகைய பிரச்சனைகள் ஏற்படாமல், கண்கள் நன்கு பொலிவோடு, அழகாகவும், பளிச்சென்ற பார்வையை பெறவும், ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கண்களுக்கு சக்தியை கொடுக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும். இப்போது அந்த உணவுகள் என்னவென்று  கொஞ்சம் சாம்பிலுக்கு தந்துவிட்டு பிறகு இத்தொடரின் இறுதியில் கண்களை  பாதுகாக்க உதவும் உணவுகளையும் உணவு பழக்கங்களை பற்றியும் விரிவாகப் பார்போம்

பச்சை காய்கறிகள்
பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளில் கரோட்டினாய்டு என்னும் சத்து அதிகம் உள்ளது. அதிலும் லுடீன் சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இந்த உணவுகளை சாப்பிட்டால், கண்களில் உள்ள ரெட்டினாவை, கண் எரிச்சல் மற்றும் பார்வையைப் பாதிக்கும் வெளிச்சத்திலிருந்து பாதுகாக்கிறது.

மஞ்சள் நிற காய்கறிகள்
மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரியும்.

பூண்டு மற்றும் வெங்காயம்
பூண்டு மற்றும் வெங்காயத்தில் அதிக அளவில் சல்பர் உள்ளது. மேலும் கண்களுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான குளுததையோன் என்னும் பொருளும் உள்ளது. இதனால் கண்கள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்கும்.

சோயா பொருட்கள்
சோயாவில் குறைந்த அளவில் கொழுப்புக்கள் மற்றும் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. ஆகவே டயட்டில் இருப்போர்கள் கண்டிப்பாக இதனை உணவில் சேர்க்க வேண்டும். மேலும் இதில் உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆசிட், வைட்டமின் ஈ உள்ளது.

முட்டை
முட்டையில் அதிக அளவில் சிஸ்டெய்ன், சல்பர், லெசித்தின், அமினோ அமிலங்கள் மற்றும் லுடீன் போன்ற பொருட்கள் இருப்பதோடு, வைட்டமின் பி2 சத்தும் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், கண்புரை உருவாக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். அதிலும் வைட்டமின் பி சத்து செல் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாதது.

பெர்ரிஸ்
பெர்ரி பழங்களில் உள்ள இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட், கண்களுக்குப் பளிச்சென்ற பார்வையை அளிக்கிறது. அதிலும் இந்த உணவுப் பொருட்கள் இரவு நேரத்திலும் தெளிவான பார்வையை அளிக்கிறது.

காரட்
பொதுவாக கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான வைட்டமின் சி மற்றும் ஏ, உடலுக்கு ஆரோக்கியத்தைத் தருவதோடு, குறிப்பாக கண்களைப் பாதுகாக்கிறது.

நட்ஸ்
நட்ஸில் அதிகமான அளவில் வைட்டமின் மற்றும் ஜிங்க் சத்துக்கள் உள்ளன. மேலும் இதில் உள்ள ஒமேகா-3, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைத்து, அணுச்சவ்வுகளை வலுவாக்குகிறது. அதிலும் கண்களுக்கு மற்ற உறுப்புகளினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

பால் பொருட்கள்
பால் பொருட்களான பால், வெண்ணெய், நெய், சீஸ், க்ரீம் போன்றவற்றில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது கண்களுக்கு ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது. எப்படியெனில் உடலில் வைட்டமின் ஏ குறைவினால் தான் பார்வை இழப்பு ஏற்படுகிறது.

மீன்
மீன்களில் ஒமேகா-3 1பேட்டி ஆசிட் அதிகம் உள்ளது. இதனை அதிகம் சாப்பிட்டால், பார்வையில் கோளாறு ஏற்படாமல், கண்கள் நன்கு பளிச்சென்று தெரியும்.

இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் (7வது) தொடரில் கண்களைப் பாதிக்கும் போதை வஸ்த்துக்களால் அதிரை குடி மக்களுக்காக குடியேறியுள்ள சாராயக் கடைகள் பற்றியும் நமது சமூகத்தின் நிலைபாடு குறித்தும் இடம் பெறும்

தொடரும்...
அதிரைமன்சூர்

10 Responses So Far:

Abdul Razik said...
This comment has been removed by the author.
Abdul Razik said...

// மஞ்சள் நிற காய்கறிகள்
மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிக அளவில் வைட்டமின் ஏ, சி, ஈ மற்றும் பீட்டா-கரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனால் பகல் நேரத்தில், சூரிய வெளிச்சத்தால் கண் கூசுதல் நீங்கி, பார்வை நன்கு தெரியும்.// Please give some name of Best Vegetables...

// இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் (7வது) தொடரில் கண்களைப் பாதிக்கும் போதை வஸ்த்துக்களால் அதிரை குடி மக்களுக்காக குடியேறியுள்ள சாராயக் கடைகள் பற்றியும் நமது சமூகத்தின் நிலைபாடு குறித்தும் இடம் பெறும் // Expecting..............


This article appears as an Eye Specialist’s Advice . Eagerly Expecting your next issue “the distress of Eyes by Alcoholic consumption”

Abdul Razik
Dubai

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

அறி விழி பற்றி
இந்த தொடர் முழுவதும்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

பயனுள்ள ஒளிப்பதிவு!

தேங்க்ஸ் மன்சூராக்கா.

KALAM SHAICK ABDUL KADER said...

வழிமேல் விழி வைத்துக் காத்திருக்க வைக்கும் பதிவு!

ZAKIR HUSSAIN said...

கண்களில் ஏற்படும் பார்வைப்பிரச்சினைகளுக்கு யோகாவும் ஒரு சிறந்த நிவாரணி.

sabeer.abushahruk said...

நாங்கள்ல்லாம் கண்ணாடி போடுவதற்கு முன்னாடி எழுதியிருக்கக் கூடாதா மன்சூர் பாய்?

Shameed said...

மன்சூர் பாய் கண்ணை பார்ட் பார்ட்டாய் பிரித்து பாடம் நடத்தி விட்டீர்கள் ,யாரு கண்ணும் பட்டுராம இருக்க ஊருக்கு போனதும் (மொலவா கண்ணுலே பட்டுராம) மொலவா சுத்தி போடுங்க!!

Ebrahim Ansari said...

இறைவனின் படைப்பில் ஒரு அபூர்வமாண படைப்பு கண்கள். அவைகளைப் பற்றிய இந்தப் பதிவும் ஒரு அபூர்வமான பதிவு.

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு