Facebook

நெறியாளர் : editor@adirainirubar.in
கருத்துக்கு : comments@adirainirubar.in

அதிரை ஈத்-மிலன் கமிட்டியின் நன்றி அறிவிப்பு! 8

அதிரைநிருபர் பதிப்பகம் | October 25, 2013 | , , ,

பிஸ்மில்லாஹ்...

எல்லாப் புகழும் இறைவனுக்கே!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

கடந்த 20.10.2013 ஞாயிற்றுக்கிழமை அதிரை லாவண்யா மஹாலில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி, பெருநாள் சந்திப்பு, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி இறைவன் அருளால் மிகச் சிறப்பாக நடந்தேறியது, அல்ஹம்து லில்லாஹ்... அது சமயம் கலந்து கொண்ட அனைத்துச் சமுதாயத்தை சார்ந்த சகோதரர்களுக்கும் அதிரை ஈத்-மிலன் கமிட்டி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்நிகழ்ச்சிக்கு பெருமளவில் பொருளாதார உதவி புரிந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்களுக்கு, மற்றும் சென்னை வாழ் அதிரை சகோதரர்களுக்கும் அதிரை ஈத்-மிலன் கமிட்டியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக.

இந்நிகழ்ச்சியின் நோக்கம், பிற சமுதாயத்தினர் மத்தியில் இஸ்லாம் பற்றிய தவறான புரிந்துணர்வுகளைக் களைந்து, அவர்களுக்கு இஸ்லாத்தைப்  பற்றிய நற்போதனைகளை எடுத்துக் கூறுவதும், இஸ்லாமியர்களுக்கும் பிற சமுதாயத்தினருக்குமிடையே உள்ள புரிந்துணர்வை வளர்த்து, நமதூரிலும் அதன் சுற்று வட்டாரத்திலும் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நன்னோக்கத்தில் நமதூர் இளைஞர்களின் மனதில் உதித்ததே இந்த ஈத்-மிலன் நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சியில் அதிரை மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அமைந்துள்ள கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகள், பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், முன்னாள் பள்ளி கல்லூரி வகுப்புத்தோழர்கள், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள், நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய பல தரப்பட்ட மக்கள், உள்ளிட்ட அனைத்து தரப்பு பிற சமுதாய அன்பர்களை அழைத்து, கலந்துரையாடல் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்வதென முடிவெடுக்கப்பட்டது.

இந்த அதிரை ஈத்-மிலன் கமிட்டிக்கு இயக்கம் மற்றும் அரசியல் சார்பற்ற  பல தரப்பட்ட இளைஞர்களைத் தன்னார்வலர்களாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டு, இந்நிகழ்ச்சியை எந்தவொரு விருப்பு வெறுப்புக்கும் ஆளாகாத வகையில் நடத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், பல சகோதரர்களின் நீண்ட நாள் தியாக உழைப்பின் விளைவாக, அதிரை பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அல்லாஹ்வின் அருளால் மிகச் சிறப்பாக நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

நிகழ்ச்சியின் தொடக்கமாக, சகோ. ஹாபிழ் முஹம்மது சாலிஹ் இறை வசனம் ஓத, சகோ. ஜமீல் முஹம்மத் சாலிஹ் வரவேற்புரை நிகழ்த்த, சகோ. இப்ராஹீம் அன்சாரி தலைமையேற்க, சகோ. வழக்குரைஞர் முனாஃப் முன்னிலை வகித்து சிறப்பு அழைப்பாளர்களான மாவட்ட நீதிபதிகளை அறிமுகம் செய்து வைத்தார். சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்ட சென்னை புதுக்கல்லூரி பேராசிரியர் சகோ. பரீத் அஸ்லம், மற்றும் மௌலவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் சிறப்புரையாற்றி மாற்று மதச் சகோதர சகோதரிகளின் வினாக்களுக்கும் பதிலளித்தார்கள். இறுதியாக அதிரை கா.மு கல்லூரி அரபித்துறை பேராசிரியர் முஹம்மது இத்ரீஸ் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

இவ்விழாவில் நமதூரை சார்ந்த நேரில் மற்றும் தொலைபேசியின் மூலமாக அழைக்கப்பட்ட பிற சமுதாய அன்பர்கள் மற்றும் நம் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட 800 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் பொழுது, அவர்களை வரவேற்ற விதம், உணவு பரிமாற்றத்தின்பொழுது சைவ/அசைவ உணவு வகைகளை அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மனமாறப் பரிமாறியது, வந்திருந்த அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது. மேலும் நம் சமுதாய இளைஞர்களின் தன்னலமற்ற சகோதர வாஞ்சையுடன் கூடிய உபசரிப்பு அனைவரையும் நெஞ்சம் நெகிழ வைத்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் பிற சமுதாய அன்பர்களுக்கும் வாசனைத்  திரவியங்கள், இனிப்பு வகைகள் மற்றும் இஸ்லாத்தைப்பற்றிய அறிமுக புத்தகங்கள் அடங்கிய அன்பளிப்புப் பெட்டியொன்றும் வழங்கப்பட்டது.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக, ஆலோசனைப் பெட்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மாற்று மத அன்பர்களின் ஆலோசனைகளும் நிகழ்ச்சியை பற்றிய மேலான கருத்துக்களும் நமதூரில் சமூக நல்லிணக்கம் தழைத்தோங்க வழி வகுக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


அவைகளுள் சில அன்பர்களின் கருத்துக்களும் ஆலோசனைகளும் கீழே தரப்பட்டுள்ளது;

செ. கோப்பெருஞ்சோழன், அன்னவாசல், சொன்னது... 

இதுவரையில் என்னை பொருத்தவரையில் நடைபெறாத ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்ச்சி, அனைவரும் சமத்துவம் என்று வாய்மொழியாக பேசுபவர்கள் மத்தியில் இது உண்மை என்று நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். நன்றி.

எல்லா பிரச்சனைகளும் முதலில் பள்ளியில் தான் ஏற்படுகிறது, முதலில் பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து மாணவர்களின் மனப்போக்கை மாற்ற வேண்டும்.

N.R.ரெங்கராஜன், சட்டமன்ற உறுப்பினர், பட்டுக்கோட்டை,  சொன்னது.....

மனிதநேயம், சமூக நல்லிணக்கம் ஒங்க பயனடையும் நிகழ்ச்சி. அனைவரிடத்தில் ஒற்றுமை மனப்பான்மை வளர வேண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டும்.

D. ரமேஷ், தமிழன் T.V சொன்னது... 

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக மதம் வேறாக இருந்தாலும் இறைவன் மட்டும் ஒருவனே என்ற செய்தி மிக சிறப்பாக இருந்தது. இந்த மக்கள் சந்திப்பு நமது ஊரை மட்டும் இல்லாமல் அனைத்து ஊர் மக்களுக்கும் சேர்ந்து அடைய வேண்டும்.

G.பிரபாகர், அதிரை, சொன்னது.... 

அனைவரையும் ஒற்றுமையோடு சிந்தித்து வாழ வழிவகுத்த இந்த நிகழ்ச்சியை ஏற்படுத்தி கொடுத்தது எனது அருமை அதிரை நண்பர்களுக்கு நன்றி. அனைவரும் ஒற்றுமையோடு போட்டி,பொறாமை இன்றி வாழ வேண்டும்.

N.வேணுகோபாலன், ஆசிரியர், கா.மு.ஆ.மே.நி பள்ளி சொன்னது.... 

தற்காலத்தில் மிகவும் அவசியமான ஒரு கூட்டம் இது மிகவும் பாராட்டத்தக்கது. ஒவ்வொரு மாதமும் ஒருநாள் இதுபோன்ற கூட்டம் நடத்தினால் சமூக நல்லிணக்கம் நிச்சயம் வளரும்.

S.கார்த்திகேயன், அதிரை, சொன்னது.... 

இது போன்ற நிகழ்ச்சிகள் மதநல்லிணக்கத்தை மேம்படுத்தும் அதிரை ஈத்-மிலன் கமிட்டிக்கு என்று நன்றிகள்.

இது போன்ற நிகழ்வுகள் ஆண்டுக்கு ஒன்றோ, இரண்டோதான் நடத்த முடியும் ஆனால் நாம் அன்றாடம் மதபேதம் பாராமல் உதவி கரம் நீட்ட வேண்டும்.

K. சொக்கலிங்க பத்தர், அதிரை, சொன்னது... 

பல மத சமூக ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக யாவரும் பின் பற்ற வேண்டும்.

எல்லாம் வல்ல இறைவன் நம்மிடம் ஷைத்தான் வராமல் இருக்க இறைவனிடம் துவா கேளுங்கள்.

பேரா. M.A. முஹம்மது அப்துல் காதிர், முன்னாள் முதல்வர், கா.மு. கல்லூரி, சொன்னது...

... சமூக நல்லிணக்கம், முஸ்லிம்களாகிய நம்மிடத்தில்தான் முதலில் வர வேண்டும், ஏற்படுத்த முயல வேண்டும். இது போன்ற நிகழ்ச்சி ஆண்டாண்டு தோறும் நடைபெற வேண்டும். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாடுகளும், அமைப்பும் மிக மிகச்சிறப்பு.

S.பாலசுப்ரமணியன், அதிரை, சொன்னது.... 

அனைத்து சமூகத்தையும் ஒன்றுபட செய்து ஒற்றுமை சமூதாய சகோதரத்துவத்தை ஒன்றுபட செய்து இவ்விழாவை ஏற்பாடு செய்து கொடுத்த அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

இதுபோன்ற என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வேற்றுமை இல்லாமல்.

V.காந்தி, அதிரை, சொன்னது.... 

இந்த நிகழ்ச்சி என்னுடைய மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகின்றது சாதி,மதம், வேறுபாடின்றி எல்லோரும் அண்ணன் தம்பி போல் வாழவேண்டும். நம் எல்லோரையும் படைத்த ஆண்டவன் ஒருவன்தான். அப்படி இருக்கும் பொழுது  நாம்தான் பிரிவினையோடு வாழ்ந்து வருகிறோம் இதை மனதில் வைக்க நாம் ஒற்றுமையாக வாழவேண்டும்.

A.தாஜுதீன், மல்லிபட்டினம், சொன்னது... 

காலத்திற்கேற்ப இந்துபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் அனைத்து மதத்தினர்களையும் ஒன்று இணைத்து கருத்துக்கள் பரிமாறிக்கொள்வதன் மூலம் சமத்துவமும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் நாட்டின் வளர்ச்சியையும் காணலாம்.

இதுபோன்ற விழாக்கள் ஒவ்வொரு ஊரிலும் கூட்டம் கூட்டி அனைத்து சமூதாய மக்களையும் ஒன்றிணைத்து பிரிவினைவாதத்தின் சூழ்ச்சியில் விழாமல் பாதுகாக்க வேண்டும்.

சி. சுந்தர்ராஜு, ஆச்சாரி, சொன்னது... 

முஸ்லீம், இந்து, கிறிஸ்டியன் எல்லோரும் எப்போதும் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதுதான் என்னுடைய விருப்பம் என்னுடைய ஆசை.

இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தியதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.

P.சங்கர், அதிரை, சொன்னது... 

அனைத்து சமூகத்தினரையும் ஒன்றுபடுத்தியதற்க்கு இந்த சுப நிகழ்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது நன்றி.

இதேபோல் ஒரு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்றால் நமதூர் பெருமை உலகம் முழுக்க பெருமை சேர்க்கும்.

ராகேஷ், ஜோய் அலுக்காஸ், ஜுவல்லரி, தஞ்சாவூர், சொன்னது... 

Good, thank you for giving opportunity to participate in this noble event and also understand Islam, we all are human. 

A.L. அஷ்ரப் அலி,  அதிரை, சொன்னது... 

இந்த நிகழ்ச்சி முதன் முறையாக அதிரையில் நடைபெறுகிறது இதன் மூலம் அனைவரையும் சந்திக்க ஒரு வாய்ப்பாக அமைந்து நல்ல கருத்துகளை கேட்கும் வாய்ப்பாக அமைந்தது.

இதே போன்று நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளலாம்.

T. லெனின், பேராசிரியர், கா.மு.கல்லூரி, சொன்னது... 

இந்த நிகழ்ச்சி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் இந்த மண்ணின் மைந்தர்கள், சகோதர சகோதரிகள் என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை மனப்பூர்வமாகவும் இதயப்பூர்வமகவும் மனம் மகிழ்ந்து ஏற்றுக்கொள்கிறேன்.

இதுபோல் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடத்துவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

A.முஹம்மது முகைதீன், அதிரை, சொன்னது... 

பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பாராட்டுக்கள், இது தாங்களுடைய முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த இறைவன் நமக்கு ஒற்றுமையை தந்தருள்வானாக.

R. தனபால், அதிரை, சொன்னது... 

அழைப்பிதழ் பெற்றபோது எல்லோரும் சிறியவர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணினேன், ஆனால் கலந்து கொண்டபோது இது போன்ற நிகழ்ச்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.

அதிரையில் உள்ள 21 வார்டுகளுக்கும் வார்டு 1-க்கு 2 நபர் வீதம் அமைப்பை ஏற்படுத்தவேண்டும்.

N.முஹம்மது ஜபருல்லாஹ், அதிரை, சொன்னது... 

நல்ல ஒரு எடுத்துகாட்டு, எல்லா வருடமும் நடத்தக்கூடிய நிகழ்ச்சி. ஊரில் உள்ள எல்லா முஹல்லாவும் ஒன்றுபட வேண்டும். எந்த முடிவாக இருந்தாலும் முஹல்லா அனைத்தும் சேர்ந்து எடுக்க வேண்டும், இயக்கங்கள் என்பது தேவையில்லை.  

மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் நமக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் தந்திருந்தாலும், நாம் அனைவரும் அல்லாஹ்வைத் துதித்து, அவனிடத்தில் பாவ மன்னிப்புக் கோருவோமாக..

இனி வரும் காலங்களில் நமதூர் அனைத்து சகோதரர்களும் ஒன்றிணைந்து இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சிறப்பாக நடத்த முன்வரவேண்டும். 

நன்றி!

இப்படிக்கு, 
அதிரை ஈத்-மிலன் கமிட்டி
அதிராம்பட்டினம்

8 Responses So Far:

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

மாஷா அல்லாஹ் !

நிறைய 'தலை'களோடு அரங்கம் நிறம்பி இருக்கிறது !

எண்ணிக்கையல்ல கூடியது... எண்ணங்களின் சங்கமம் அங்கே கூடியிருக்கிறது !

உண்பதல்ல உறவாடுவது, உயிரோட்டமான உரையடலோடு உயர்ந்து நிற்பதே சிறப்பு !

அதனைச் சாதித்துக் காட்டியிருக்கிறது இந்த நிகழ்வு.

கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்துக்கள்... இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமல் தவித்தவர்களுக்கும் ஆறுதல் !

KALAM SHAICK ABDUL KADER said...

மிகச் சிறப்பான விழாவினால் மனங்கள் ஒன்றுபட்டு என்றும் சகோதரத்துவத்துடனும், மதச் சகிப்புத்தன்மையுடனும் வாழும் ஊராக அதிரைப்பட்டினம் அமையும், இன்ஷா அல்லாஹ்!

சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தச் செயல்வீரர்கட்குச் சிறப்பான வாழ்த்துகள்!

sabeer.abushahruk said...

மதம் சம்பந்தமான காழ்ப்புணர்ச்சிகளைக் களையவும் மாற்றுமத சகோதரர்களோடு ஒரு நிம்மதியான ஒற்றுமையான வாழ்க்கை வாழவும் வழிவகுக்கும் இதுபோன்ற விழாக்கள் மீண்டும் மீண்டும் நடத்தப்பட வேண்டும்.

சிறப்பான ஏற்பாடுகளைச் செய்தச் செயல்வீரர்கட்குச் சிறப்பான வாழ்த்துகள்!

M.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) said...

கமிட்டியினருக்கும், கலந்து கொண்டவர்களுக்கும், பொருளீட்டியவர்களுக்கும் அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக!

shamsul huq said...

அதிராம்பட்டினத்தில் அரசியல் சார்பற்ற இளைஞர்களால் நடத்தப்பட்ட சமூக நல்லிணக்க விழாவில், அழைப்பிதழில் தமது பெயரை போடவில்லை என்பதை காரணம் காட்டி திமுகவைச் சேர்ந்த பேரூராட்சி மன்றத் தலைவருடன் திமுகவினர் விழாவைப் புறக்கணித்தனர். 900 பேர் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்களுடன் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

# DMK வா or DRMK (Divide & Rule Munnetra Kazhagam)வா?

Ebrahim Ansari said...

தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் நமது இளைஞர்கள் இப்படி அதிரையில் ஒரு அமைதிப் புரட்சி நடத்தி இருக்கிறார்கள். அவர்களது சிந்தனையில் உதித்த இந்த எண்ணம் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டது . அனைவரும் சிரித்த முகத்துடன் வாயிலில் நின்று வரவேற்ற விதம தொடங்கி உணவு பரிமாறும்போது உபசரித்த முறைவரை ஒவ்வொரு செயலும் PROFESSIONAL ஆக இருந்தது.

இந்த விழாவுக்கு தலைமை ஏற்ற தருணங்கள் வாழ்வில் மிக மிக மகிழ்வான தருணங்கள் ஆகும். மாஷா அல்லாஹ்.

இறைவன் இந்த இளைஞர்களுக்கு நல்லருள் புரிவானாக்!

Unknown said...

மேடையில் பந்தாவாக அமர்ந்து காட்சிஅளிக்க விரும்பும் அரசியல் வாதிகளுக்கும் செல்வந்தர்களுக்கும்,தன்னை முன்னிலை படுத்தவில்லையே என்ற ஆதங்கம் இருக்கலாம்.மூமின்களின் முக்கிய கட மைகளில் ஒன்றான அழைப்பு பணியை அல்லாஹ்வின் கிருபையால் சிறப்பாக நடத்திய நமது இளைஞர்களில் யாரும் மேடையேறியோ உரையாற்றியோ தன்னை முன்னிலை படுத்தவில்லை என்பது கவனிக்கதக்க விஷயம்.

இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் என்ன பயன் என்று சிலர் கேட்கிறார்கள்.அழைப்பு பணி செய்வது தான் நமது கடமை மனங்களை மாற்றுவது அல்லாஹ்.

KALAM SHAICK ABDUL KADER said...

\\இந்த நிகழ்ச்சி நடைபெற்றதால் என்ன பயன் என்று சிலர் கேட்கிறார்கள்.அழைப்பு பணி செய்வது தான் நமது கடமை மனங்களை மாற்றுவது அல்லாஹ்.\\

நல்லதையே சொன்னீர்கள்; நன்றாகவே சொன்னீர்கள்! உண்மையைச் சொன்னீர்கள்; உரத்துச் சொன்னீர்கள்!

உமர் தமிழ் தட்டசுப் பலகை



           

 

உமர் தமிழ் தட்டசுப் பலகை

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்

நபிமணியும் நகைச்சுவையும்

உமர் தமிழ் தட்டசுப் பலகை

மறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு

Linked to ஊடக போதை

அன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள்! அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு